சென்னையில் பிடிபட்ட அல்ஜீரிய நபர் விடுதலை-இன்டர்போல் நடவடிக்கை
சென்னை: அல்ஜீரியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த 17 ஆண்டுகளாக இன்டர்போல் அமைப்பால் தேடப்பட்டு, சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 18ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சலீம் அப்பாசி (42) குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக இன்டர்போல் அலெர்ட் இருந்ததால் இந்த நடவடிக்கையை குடியுரிமைப் பிரிவினர் எடுத்தனர்.
ஆனால், அல்ஜீரியாவில் தனது தந்தை அரசியல் தலைவராக உள்ளதாகவும், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக தனது குடும்பத்தினர் மீது அல்ஜீரிய அரசு குண்டுவெடிப்பு வழக்கைப் போட்டதாகவும், இதனால் கத்தார் நாட்டுக்கு குடிபெயர்ந்து நெடுங்காலம் ஆகிவிட்டதாகவும் அப்பாசி கூறினார்.
மேலும் இப்போது சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நடத்தி வருவதாகவும், கர்நாடக அரசுக்கு இது தொடர்பான ஆலோசனை வழங்கவே இந்தியா வந்ததாகவும், தான்
தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது என்றும் கூறினார்.
ஆனாலும் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. அதிகாரிகளும் இவரிடம் விசாரணை நடத்திவிட்டு இன்டர்போலுக்கு தகவல் தந்தனர்.
இன்டர்போல் போலீசார் அல்ஜீரிய நாட்டுக்கு தகவல் தந்தனர். ஆனால் தற்போது விசாரணைக்கு அப்பாசி தேவையில்லை என்று அல்ஜீரிய அரசு அறிவித்துவிட்டது.
இதையடுத்து அவர் மீதான ரெட் கார்னர் நோட்டீஸை இன்டர்போல் வாபஸ் பெறுவதாக அறிவித்து இது தொடர்பான உத்தரவை ஐ.பிக்கு அனுப்பியது. அவர்கள் தமிழக போலீசாருக்கு தகவல் தந்து அப்பாசியை விடுவிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தாம்பரம் நீதிமன்றத்தில் அப்பாசி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் இவர் விசாரணைக்கு தேவையில்லை என்று அல்ஜீரியா நாட்டு போலீசாரும் இன்டர்போலும் தெரிவித்துவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அப்பாசியை உடனடியாக விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் சரவணன் உத்தரவிட்டார்.