உதயமாகிறது சர்வதேச அண்ணா பல்கலை.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்த்து உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்து பதிலளித்த அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 136க்கும் அதிகமான கல்லூரிகள் இணைவு கல்லூரிகளாக உள்ளன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் பெரும்பாலான நேரங்களில் இணைவு கல்லூரிகள் தொடர்பான பணிகளில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை.
எனவே தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளை உள்ளடக்கி ஓர் ஒருமைப் பல்கலைக்கழகம் உருவாக்கினால் ஆராய்ச்சி படிப்பு சிறப்பு பெறும் என்று தொழில் நுட்ப கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்த்து உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகம் உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தர்மபுரி உட்பட ஐந்து இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும்.
முதல்வர் கருணாநிதி உயர் கல்வித்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு தமிழ்நாட்டில் 6 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் 3 ஆண்டுகளில் 11 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்கியவர் இந்தியாவிலேயே முதல்வர் கருணாநிதி ஒருவர்தான்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கல்வியின் தரமும் உயர்ந்துள்ளது.
தனியார் கல்லூரிகளின் போட்டிகளை சமாளிக்கவே அரசு கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. நுழைவு தேர்வை ரத்து செய்த பிறகு என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. என்றாலும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அரசு மூலம் ஒதுக்கப்படும் இடங்களுக்கு ரூ.32,500ம், நிர்வாகத்தின் மூலம் ஒதுக்கப்படும் இடங்களுக்கு ரூ.62,500ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் மட்டும் மாணவர் நலன் கருதி 2 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நுழைவு தேர்வை ரத்து செய்ததால் முந்தைய ஆண்டுகளைவிட 10,000 கிராமப்புற மாணவர்கள் அதிகமாக என்ஜினீயரிங் கல்விகள் சேர்ந்துள்ளனர்.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அவர்களது சேர்க்கை 2,565 ஆக உயர்ந்துள்ளது.
18 வயது முதல் 24 வயது வரை மாணவர்களின் உயர்கல்வி 9 சதவீதமாக இந்திய அளவில் இருந்தது. இதை 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நாம் 14 சதவீதத்தை எட்டிவிட்டோம். விரைவிலேயே தேசிய இலக்கான 15 சதவீதத்தை அடைந்து விடுவோம் என்றார்.