போலி ஜாதி சான்றிதழ்-தேர்தலில் வென்றவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்
சென்னை: தமிழ்நாடு ஊராட்சிகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் போலி ஜாதிச் சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவும், சட்டப்படியான தண்டனை பெற்றுத் தரவும், குறைந்தது 6 ஆண்டுகள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்றும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவருக்காக அமைக்கப்பட்ட தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை இன்று ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதே போல மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் வார்டுக்கு ஒரு கவுன்சிலர்தான் உள்ளனர். ஆனால் கிராம பஞ்சாயத்துகளில் ஒரே வார்டுக்கு 2 அல்லது 3 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதை வார்டுக்கு ஒரு கவுன்சிலர் என மாற்றும் சட்டத் திருத்தத்துக்கான மசோதாவையும் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.