பழனி-13 நாள் உண்டியல் வசூல் ரூ.56 லட்சம்
பழனி: பழனி முத்துக்குமார சுவாமி திருக்கோயில் உண்டியலில் கடந்த 13ம் நாட்களில் மட்டும் ரூ. 56 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு பழனி. இங்கு வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
இந்நிலையில் நேற்று பழனி கோயில் இணை ஆணையர் தி.ராசமாணிக்கம், துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன், அறநிலையத்துறை மதுரை மண்டல துணை ஆணையர் கோவிந்தராம் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் உடைக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கம் ரூ. 55 லட்சத்து 54 ஆயிரம் பணமும், 715 கிராம் தங்கமும், 4 ஆயிரத்து 727 கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் 223ம் இருந்தன.
முருகனுக்கு மொபைல் காணிக்கை...
அதே போன்று, தங்கத்திலான வேல், மாங்கல்யம், மோதிரம், செயின், வெள்ளி வேல், வீடு, ஆள் ரூபம், உடலின் பாகங்கள், பித்தளை வேல், பாத்திரங்கள் மற்றும் கைக்கடிகாரம், பரிவட்டங்கள், ஏலக்காய் மாலை போன்றவைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
இவைகளுடன் பக்தர் ஒருவர் முருகனுக்கு மொபைல் போன் ஒன்றையும் காணிக்கையாக கொடுத்துள்ளார்.
அப்போது, கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ. 56 லட்சம் கிடைத்துள்ளது தெரிய வந்தது. கடந்த ஆண்டு, இதே காலத்தில் கிடைத்த உண்டியல் வசூலை விட ரூ. 15 லட்சம் அதிகம் என்று கோயில் அதிகாரிகள் கூறினர்.