பபூவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
போர்ட் மோர்ஸ்பை: பபூவா நியூ கினியா நாட்டில் இன்று 6.7 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சற்று மேலே இருக்கும் நாடு பபூவா நியூ கினியா. சுமார் 63 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 7.58 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி அதிகாலை 12.19 மணிக்கு)6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
இந்த பூகம்பம் அந்த நாட்டின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பையில் இருந்து சுமார் 830 கிமீ தொலைவில் மையமிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போர்ட் மோர்ஸ்பையை சேர்ந்த பூகோள ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில்,
இந்த நிலநடுக்கம் ராபவுல் நகரில் அதிகம் உணரப்பட்டது. பாதி ராத்திரியில் தூங்கி கொண்டிருந்த மக்கள் வீட்டை விட்டு அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினர்.
சில சமயங்களில் 6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் சுனாமி உண்டாகலாம் என்றும், அதனால் 100 கிமீ., தூரத்துக்குள் பாதிப்பை ஏற்படுதத்லாம் எனவும் பசிபிக் சுனாமி மையம் தெரிவித்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் மட்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வரவில்லை.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றார்.