வட கொரிய அணு ஆயுதங்களை எதிர்கொள்ள தயார்-ஒபாமா
வாஷிங்டன்: வட கொரியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க அமெரிக்கா தயார். ஹவாய் தீவை நோக்கி அது ஏவப் போவதாக கூறப்படும் ஏவுகணையை சந்திக்க அமெரிக்க படைகள் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி ஹவாய் தீவை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய வல்லமை படைத்த ஏவுகணையை ஏவ வட கொரியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சிபிஎஸ் நிறுவனத்திற்கு ஒபாமா அளித்த பேட்டியின்போது, அமெரிக்க அரசும், அமெரிக்க ராணுவமும், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவை. தயார் நிலையில் உள்ளவை.
எத்தகைய விளைவையும் சந்திக்கும் வகையில் நமது ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அமெரிக்க மக்களுக்கு நான் அளிக்க விரும்பும் உறுதி என்னவென்றால், என்ன நடந்தாலும் அதை சமாளித்து உங்களைக் காப்போம். அதில் இந்த அரசும், ராணுவமும் உறுதியாக இருக்கிறது என்றார் ஒபாமா.
இதற்கிடையே, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்காவுக்கு வட கொரியாதான் மிகப் பெரிய மிரட்டலாக இருக்கிறது என 51 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கான மிரட்டல் நாடுகளாக அவர்கள் கருதும் பட்டியலில் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உள்ளன.
இதற்கிடையே, ஹவாய் தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க பிராந்தியத்திற்குள் யாரையும் ஊடுறுவ அனுமதிக்க மாட்டோம். அதற்காகவே ராணுவம் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஹவாய் தீவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள அமெரிக்க ராணுவம், அங்கு ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. அலாஸ்கா மாகாணத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் கிடைத்தால் அதை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்துவோம் என தலிபான் தீவிரவாதிகள் மிரட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.