முல்லை பெரியாறுக்கு பதில் புதிய அணை-கேரளம் தீவிரம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு (குமுளி-தேக்கடி அணை) பதிலாக புதிய அணை கட்டும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகள் தொடங்கிவிட்டதாக கேரள சட்டசபையில் அம் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் விவசாயத்துக்கு பெருமளவில் உதவி வரும் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ள நிலையி்ல, அதன் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரியதை உச்ச நீதிமன்றம் ஏற்று உயரத்தை அதிகரி்க்க உத்தரவிட்டும் அதை கேரள அரசு மதிக்காமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் இந்த அணைக்குப் பதிலாக புதிய அணையைக் கட்டி நீர் முழுவதையும் தானே பயன்படுத்திக் கொள்ள கேரளம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சட்டசபையில் பிரேமச்சந்திரன் கூறுகையில்,
சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட, 112 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகவேதான் அந்த அணைக்கு பதில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கினோம்.
முதல் கட்டமாக ஆற்றில் 3 கிமீ தூரத்துக்கு ஆய்வு செய்து முடித்து விட்டோம். மீதமுள்ள 4 கிமீ தூரத்திலும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரு மாத காலத்துக்குள் இந்த ஆய்வு முடிந்து விடும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் இலாகாவின் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். அதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க கேரள அரசுக்கு முழு உரிமை உண்டு. ஆனாலும் அப்படி செய்ய நாங்கள் விரும்பவில்லை. தமிழக அரசுடன் சுமுகமாகப் பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவே கேரளா விரும்புகிறது.
அணை பலவீனமாக உள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்த அணையை ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு அது பாதுகாப்பாவே உள்ளதாகக் கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில் தான் பொய்யான பீதியைக் கிளப்பி புதிய அணையைக் கட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை குறைக்க கேரளம் திட்டமிட்டுள்ளது.
சேட்டன்களா... சும்மாவா...!!