சட்டசபையில் துரைமுருகன்-சேகர்பாபு ஆவேச மோதல்
சென்னை: சட்டசபையில் இன்று பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் அதிமுக எம்எல்ஏ சேகர் பாபுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சேகர் பாபுவைப் பார்த்து துரைமுருகன் ஒருமையில் பேசிய வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடந்தது.
அப்போது அதிமுக உறுப்பினர் சேகர் பாபு பேசுகையில், இலங்கைப் பிரச்சனையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற நாடகங்களைப் போல இப்போது இந்தக் கப்பலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் செயலும் நாடகமாகிவிடக் கூடாது என்றார்.
அப்போது இடைமறித்த அமைச்சர் துரைமுருகன், சேகர் பாபுவை நோக்கி ஆவோசமாகப் பேசினார். அப்போது அமைச்சர் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.
திமுக உறுப்பினர்கள் பதிலுக்கு சத்தமிடவே அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
தொடர்ந்து பேசிய சேகர் பாபு, தனக்கெதிராக அமைச்சர் பயன்படுத்திய வார்த்தையை அமைச்சருக்கு எதிராக பயன்படுத்தினார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதி்ர்ப்பு கிளம்பியது.
அப்போது மீண்டும் எழுந்த அமைச்சர் துரைமுருகன், சேகர் பாபுவை நோக்கி ஆவேசமாக பேசினார். சேகர் பாபுவை நோக்கி ஒருமையில் அவர் சில வார்த்தைகளைக் கூற அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி தலையிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவது பற்றிய விவாதம் திசை மாறிப் போகிறது. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் போய்ச் சேர வேண்டும். எனவே அமைச்சரும் அதிமுக உறுப்பினரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் மாறி மாறிக் கூறிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீ்க்க வேண்டும் என்றார்.
இதையடுத்து துரைமுருகன், சேகர் பாபு ஆகியோர் கூறிய வார்த்தைகள் நீக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.