ரயிலை கடத்தியது என் மகன் அல்ல-தாய் மறுப்பு
ஏப்ரல் 29ம் தேதி பேசின் பிரிட்ஜ் ரயி்ல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயிலை கடத்திய நபர் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதினார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் ரயிலைக் கடத்தியது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடாவைச் சேர்ந்த நாகராஜ் என்று கண்டுபிடித்தனர்.
நாகராஜுக்கு ரூபாவதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து ரூபாவதி, குழந்தைகள், நாகராஜுன் தாயார் லட்சுமி ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது கணவர்தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார் ரூபாவதி.
அதேசமயம், உடலை பார்த்த நாகராஜின் தாயார் லட்சுமி, தனது மகன் உடல் போலத்தான் உள்ளது என்று முதலில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அது எனது மகன் அல்ல என்று கூறி விட்டார்.
இப்போது நாகராஜின் உடலின் டிஎன்ஏ மற்றும் தாயார், குழந்தைகளின் டிஎன்ஏவை மேட்ச் செய்யும் சோதனை நடந்து வருகிறது. இதன் முடிவு வந்த பிறகுதான் நாகராஜா, இல்லையா என்பது தெரிய வரும்.
ரயில் கடத்தலுக்கு முன்பு சில நாட்களாக நாகராஜ் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பிச்சைக்காரர் போல சுற்றிக் கொண்டிருந்ததாக பலரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரயிலைக் கடத்தினாரா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து இப்படிச் செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.