ஸ்ரீபெரும்புதூரில் இன்னொரு விமான நிலையம்!
சென்னை: ஸ்ரீபெரும்புதூரிலும் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையி்ல், பயணிகள் போக்குவரத்து, சரக்கு இயக்கம் ஆகிய இரண்டிலும் சென்னை விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.1808 கோடி செலவிட இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே ரூ.127.06 கோடி மதிப்பீட்டில் 126 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இந்திய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. அங்கு விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஸ்ரீபெரும்புதூரில் மேலும் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றார் அமைச்சர் நேரு.