ஐ.நா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்-'இந்தியாவுக்கு யு.எஸ் உதவ வேண்டும்'
வாஷிங்டன்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும், உதவ வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார்.
ஜார்ஜ் புஷ் பதவிக்காலத்தில் அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் பர்ன்ஸ். இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் முக்கியப் பங்காற்றியவர்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க அமெரிக்கா உதவ வேண்டும் என பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த இந்திய அமெரிக்க உறவுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும். அதற்கு அமெரிக்கா உதவ வேண்டும், ஆதரிக்க வேண்டும்.
அதேபோல பிரேசில் நாடும் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா உதவ வேண்டும் என்றார் பர்ன்ஸ்.
அமெரிக்கத் தரப்பில் இதுவரை இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பொறுப்பு அளிக்க வேண்டும் என சக்தி வாய்ந்த நபர்கள் யாரும் வலியுறுத்தியதில்லை. முதல் முறையாக பர்ன்ஸ், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும் என்பதை மட்டுமே இதுவரை அமெரிக்க அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தி வருகிறது.
அதேசமயம், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை அமெரிக்கா முழு மனதாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
பர்ன்ஸ் தொடர்ந்து பேசுகையில், பிராந்திய அளவிலும், உலக அலவிலும் இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பணியில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயலாற்ற முடியும் என்றார்.