காந்தமால்-கிறிஸ்தவர்களிடம் வருத்தம் தெரிவித்த ப.சி
ஒரிசா மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ப.சிதம்பரம். இன்று அவர் காந்தமால் மாவட்டத்திற்குட்பட்ட புல்பானிக்குச் சென்ற அவர் அங்கு பாதிக்கப்பட்ட பழங்குடியின கிறிஸ்தவ மக்களை சந்தித்தார்.
காந்தமால் மாவட்டத்தில் 38 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து இடம் பெயர்ந்த கிறிஸ்தவர்கள் தற்போது கடந்த 10 மாதங்களாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
அவர்களிடையே ப.சிதம்பரம் பேசுகையில், என்ன நடந்ததோ அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.
நீங்கள் உங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களது வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும். உங்களது நிலையைப் பார்க்கவே நான் இங்கு வந்துள்ளேன். மத்திய அரசும், மாநில அரசும் உங்களது சிரமங்களை நீக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு உங்களுக்கு வர வேண்டும். அனைவரும் இணைந்து நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும்.
நீங்கள் அனைவரும் உங்களது ஊர்களுக்குச் செல்லுங்கள். அரசு உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.
அனைத்து முகாம்களையும் ப.சிதம்பரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக நேற்று கோராபுட் பகுதிக்கு சென்ற ப.சிதம்பரம் அங்கு நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல்:
இந் நிலையில் மேற்கு வங்காள மாநிலம் லால்கர் பகுதியில் உள்ள கடசோலே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இன்று துணை ராணுவத்தினரை குறி வைத்து கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர்.
ஆனால், இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.