பிரபாகரனை கொன்றதாக கூறிய ஜோசியர் கைது!
கொழும்பு: விரைவில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்து விடும். பிரபாகரனை நான்தான் சூனியம் வைத்துக் கொன்றேன் என்று ஏடாகூடமாக தொலைக்காட்சியில் கூறிய ஜோதிடரை இலங்கை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தி்ல ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான ஜெயசேகரா பிரச்சினை எழுப்பினார்.
அவர் கூறுகையில், பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை, சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், ராஜபக்சேவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கூறியிருக்கின்றார்.
அந்த ஜோதிடர் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கருத்தை கூறியமைக்காக ஜோதிடர் ஒருவர் கைது செய்யபட்டது இலங்கை வரலாற்றில் இது தான் முதல் தடவை. இந்த நாட்டில் ஜோதிடர் கூட தனது கருத்தைக கூற முடியாமல் உள்ளது என்றார்.
தமிழீழ அரசு சாத்தியமில்லை-கருணா:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதைப் போல நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பது என்பது சாத்தியமல்ல என்று புலிகள் இயக்கத்திடமிருந்து பிரிந்து சென்ற கருணா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நாடு கடந்த அரசாங்கதை அமைப்பதற்கு வேறு ஒருநாட்டின் அங்கீகாரம் அவசியமானதாகும். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் எந்த ஒரு நாடும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
தற்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அங்கீகாரத்தை எந்த நாடும் வழங்கப் போவதில்லை என்றார் கருணா.