திமுக-காங்கிரஸ் உறவு 'லட்சிய உறவா'?
சென்னை: திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே சந்தேக விதைகளை விதைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி முயற்சி செய்வதாக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திமுக உள்ளது. மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?
பாலபாரதி: தோல்வி ஒரு புறம் இருந்தாலும் தொடர்ந்து விடா முயற்சியுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திமுக மற்றும் கம்யூனிஸ்ட்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி நடைபெற்றபோதே மாநிலங்களுக்கு 27 சதவீத நிதியைத்தான் மத்திய அரசு வழங்கியது. இப்போது சொந்த காலில் நிற்கிறார்கள். அளவு மாற்றம் குண மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கம்யூனிஸ விதி.
இப்போது நிதியின் அளவை எப்படி அதிகரித்து தருவார்கள்?.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே சந்தேக விதைகளை விதைக்க பாலபாரதி முயற்சி செய்கிறார். திமுக ஆதரவின்றி மத்தியில் காங்கிரஸ் அரசு நடக்கும் சூழலிலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவோடு திமுக ஆட்சி நடைபெற்றாலும் அதற்கும் அப்பாற்பட்டு எங்களுக்கிடையே லட்சிய உறவு உள்ளது. மத்திய நிதி ஆணைய ஃபார்முலா படிதான் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): பத்திரிகைகளில் காங்கிரஸ் கட்சியின் வேறொரு லட்சியம் பற்றி (ஆட்சியில் பங்கு?) அடிக்கடி செய்திகள் வருகின்றன. உங்கள் உறுப்பினர்களை உங்கள் தலைவர் சுதர்சனம் மத்தியஸ்தம் செய்வதாக செய்திகள் வருகின்றன.
சுதர்சனம் (காங்கிரஸ்): தேர்தல் தோல்வியால் சிவபுண்ணியம் இப்படி பேசுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள். மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட்டுகள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது தவறு என்று உங்கள் தலைவர் ஏ.பி.பரதனே கூறிவிட்டார். எனவே சிவபுண்ணியம் இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
பாலபாரதி: பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி போன்ற பெருந்தலைவர்களே தேர்தலில் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் வெற்றியை விட தோல்வியில் தான் அதிக படிப்பினைகளை பெற முடியும். எனவே முதல்வர் கேட்டுக் கொண்டபடி 50 சதவீகித நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்துத் தர வேண்டும் என்றார்.