20 வருடமாக தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் தலைவர் டெல்லியில் கைது
சென்னை: தமிழக போலீஸாரின் பிடியில் சிக்காமல் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் என்.கே.கோபால், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் கியூ பிரிவு சிஐடி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் என்.கே.கோபால். தற்போது 59 வயதாகிறது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
70களில் கோபாலும், சிலரும் சேர்ந்து தர்மலிங்க செட்டியார் என்பவரைக் கொலை செய்தனர். மேலும், அந்த சம்பவத்திற்குப் பின்னர் அவரைக் கைது செய்ய சென்ற இன்ஸ்பெக்டரை கொலை செய்யவும் முயன்றார். இருப்பினும் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
விசாரணையில் அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது அப்பீல் செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.
1974ம் ஆண்டு முதல் சேலம், வேலூர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்.
1987ம் ஆண்டு பரோலில் வெளியே வந்த அவர் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான பின்னர் மாவோயிஸ்ட் நக்சலைட்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் கோபால். மாவோயிஸ்ட் உயர் மட்டத் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் அவரைப் பார்த்ததாக தமிழக கியூ பிரிவு சிஐடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் கோபாலைப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரை சென்னைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரைக் காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தி்ல பெருமளவில் சதிச் செயலில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.