நெல்லை பல்கலை-2 கைதிகளுக்கு பணி நியமனம்
நெல்லை: தண்டனை அனுபவித்து வெளியேறும் கைதிகள் திருந்தி வாழ உதவும் வகையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இரண்டு கைதிகளுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது.
திருநெல்லேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு கல்வித்துறை இயக்குனர்கள் மற்றும் ஓருங்கிணைப்பாளர் கூட்டம் நடந்தது. இதில் இயக்குனர் பால்ராஜ் ஜோசப் கலந்து கொண்டு வரவேற்றார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
திருநெல்வேலி பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலை தொடர்பு கல்வி திட்டத்தில் 50 ஆயிரம் மாணவ, மாணவிகளை சேர்க்க இந்த ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இங்கு பிஎட் படிப்புக்கான தேர்வுகள் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படுகிறது.
பேஷன் டெக்னலாஜி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பயர் அன்டி சேப்டி உள்பட பல்வேறு பாடபிரிவுகள் இந்தாண்டு முதல் துவக்கப்படுகிறது என்றார் சபாபதி மோகன்.
பின்னர் சிறைத்துறை சிறப்பு கல்வி திட்டத்தி்ன் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பட்ட மேற்படிப்பு படித்து அண்ணா பிறந்தநாள் விழாவில் விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்த மோசஸ் அருள் ஆண்டோ, அனந்த நாடார் குடியிருப்பை சேர்ந்த தாணுலிங்கம் ஆகியோருக்கு பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை துணை வேந்தர் வழங்கினார்.