சிபிஎம் தலைவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், யாரையும் மதிப்பதில்லை - பரதன்
டெல்லி: ஆட்சிக்கு வந்து விட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிடிவாதக்காரர்களாகி விடுகிறார்கள். தன்னிஷ்டப்படிதான் செயல்படுகிறார்கள். மேற்கு வங்க நக்சலைட் விவகாரத்திற்கு முதல்வர் புத்ததேவ்தான பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன்.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு பரதன் அளித்துள்ள பேட்டி..
மேற்கு வங்க மாநிலத்தில் ஏதோ தனிக் கட்சி ஆட்சி நடப்பது போல மார்க்சிஸ்டுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவதாகவே அவர்கள் கருதவில்லை.
லால்கர் வன்முறைக்கு ஆதிவாசி மக்களை அரசு புறக்கணித்ததே காரணம். இதற்கு முதல்வர் புத்ததேவ்தான் பொறுப்பேற்க வேண்டும்.
யாருடைய ஆலோசனையையும் கேட்பதற்கு மார்க்சிஸ்டுகள் தயாராக இருப்பதாகவே தெரியவில்லை. என்னை எந்த விஷயத்திலும் அவர்கள் கலந்து ஆலோசிப்பதில்லை. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசின் பல்வேறு தோல்விகளுக்கு அதுவே காரணம்.
மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் கூட ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் இஷ்டப்படி, பிடிவாதப் போக்குடன் நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
லால்கரைப் புறக்கணித்தது மேற்கு வங்க அரசு செய்த தவறு. அந்த மக்களுக்காக மேற்கு வங்க அரசு எதையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அங்குள்ள மக்களை முன்னேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
செய்ய முடியாத நிலையில் மேற்கு வங்க அரசு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் புறக்கணிப்பு மனோபாவத்துடன் மேற்கு வங்க அரசு இருந்து வருகிறது. முக்கியமாக பழங்குடியின மக்களின் நலனை மேற்கு வங்க அரசு கருத்தில் கொள்ளவில்லை.
இப்போதைய நிலையில் மமதா பானர்ஜியும், திரினமூல் காங்கிரஸும் எங்களது பலவீனத்தையே அவர்களது பலமாக மாற்றிக் கொள்ள முனைகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் புத்ததேவ்தான் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக அவர் பதவி விலக வேண்டுமா என்று கேட்டால் நான் பதிலளிக்க விரும்பவில்லை. அதை புத்ததேவிடம்தான் கேட்க வேண்டும். யார் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு இடதுசாரி ஆட்சி இருக்கும் என்றார் பரதன்.