தஞ்சாவூரில் விசாரணை கைதி தற்கொலை-போலீஸ் காரணமா?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கு போலீசார் தான் காரணம் என இறந்தவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனைத் தெருவைச் சேர்ந்தவர் பொற்கொல்லர் லட்சுமணன் (40). சமீபத்தில் இவர் திருட்டு வழக்கு தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருடன் அவரது மைத்துனர் குமாரும் உடன் வந்தார். இந்நிலையில் குமார் டீ குடிக்க சென்று விட்டு திரும்பியபோது காவல் நிலையத்துக்குள் இருந்த மரத்தில் லட்சுமணன் தூக்கில் தொங்கினார்.
உடனடியாக, போலீசார் லட்சுமணனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து லட்சுமணனின் மனைவி சாந்தி மற்றும் மாமியார் வசந்தா ஆகியோர் கூறுகையில்,
வலங்கைமானைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் லட்சுமணனின் மகன் முகேஷ் மற்றும் அதேபகுதியை சேர்ந்த அய்யப்பன், விக்னேஷ், ராஜேந்திரன் உட்பட 14 பேரை போலீசார் திருட்டு வழக்கு விசாரணைக்காக பத்து நாட்கள் முன்பே அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் லட்சுமணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவரது மரணத்திற்கு போலீசாரே காரணம் என்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.