குடும்ப தகராறு-நாகர்கோவில் டாக்டர் விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவில்: மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நாகர்கோவிலை சேர்ந்த டாக்டர் ஒருவர் திருமணம் முடிந்த ஒராண்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வடசேரி ஏசுவடியான் தெருவைச் சேர்ந்த டாக்டர் ஜெயபாலன். இவரது மகன் டாக்டர் கிளமெண்ட் ஆரோன் (32). இவருக்கும் கபீனா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இதுவரை குழந்தை கூட பிறக்கவில்லை.
கிளமெண்ட் ஆரோன், கருங்கல்லில் மருத்துவமனை நடத்தி வந்தார். கபீனா களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கிளமெண்ட் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை அவரது குடும்பத்தினர் நாகர்கோவில் பார்வதிபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், கிளமெண்டுக்கும், கபீனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தால் கிளமெண்ட் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
அடுத்தவர்களின் உயிரை காப்பாற்றக்கூடிய நன்கு படித்த டாக்டர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.