தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாது - அமைச்சர் கூறுகிறார்
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட 5 பேரில் 2 பேர் குணமடைந்து விட்டனர் என்று கூறியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ்ர்செல்வம்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய டாக்டர்கள்தான் பெரிய அளவில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருமான வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 மட்டுமே கட்டணம்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் மட்டும் ரூ.10 கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ தொழில் புனிதமானது. டாக்டர்கள் போராட்டங்களை தவிர்த்து சேவை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க உள்ளன. இதில் தர்மபுரி மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. பன்றிக் காய்ச்சல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வருகிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அச்சப்படவும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் குணமடைந்துவிட்டனர் என்றார்.