குழந்தையுடன் பெண் சாவு - கணவன்-மாமியார் கைது
நாகர்கோவில்: கைக்குழந்தையுடன், பெண் கொல்லப்பட்ட கொடுமையான சம்பவத்தில் அவருடைய கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
இரணியல் அருகே உள்ள ஆளுர் தோப்புவிளையை சேர்ந்தவர் கதிரேசன். ஓர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு தேவிகாவும், கைக்குழந்தையும் தீயில் கருகி இறந்தனர்.
இதுகுறித்து இரணியல் போலீசார் சந்தேக சாவு வழக்கு பதிவு செய்தனர். தேவிகாவை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர்.
மேலும் கணவர் குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே தேவிகாவின் சாவு தொடர்பாக ஆர்டிஓ தேவதாஸ் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை நேற்று காலை இரணியல் போலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டது.
அதில் வரதட்சனை கொடுமையால் தேவிகா இறந்ததாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேக சாவாக இருந்த இந்த வழக்கை வரதட்சணை கொடுமை செய்து பெண்ணை இறக்க செய்தல் (இபிகோ 304-பி) என்ற பிரிவுக்கு மாற்றினார்கள். கொலை வழக்குக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அந்த தண்டனை இந்த பிரிவுக்கும் கிடைக்கும்.
மேலும் ஆர்டிஓ அறிக்கையில், தேவிகாவின் சாவுக்கு அவரது கணவரும், மாமியாரும் முக்கிய காரணம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தேவிகாவின் கணவர் கதிரேசன் மற்றும் அவரது அம்மா இன்று கைது செய்யப்பட்டனர்