நீச்சலின்போது மாணவன் பலி - மக்கள் சாலை மறியல்
நெல்லை: நெல்லையில் நீச்சல் பயிற்சியின்போது மாணவன் இறந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுன் கன்னியான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. நகைகடை அதிபர். இவரது மகன் முகமது ஆசிக். அங்குள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து 30 மாணவர்களை ஆசிரியர்கள் பாளை அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு நீச்சல் பயிற்சி அளித்த போது சிறுவன் ஆசிக் நீரில் மூழ்கி இறந்தான். பள்ளி குழந்தைகள் நீச்சல் பயிற்சி செய்யும்போது அங்கு பணியில் இருக்கும் உயிர் காப்பாளர்கள்தான் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆபத்து நேரிட்டால் இவர்கள்தான் கவனிக்க வேண்டும்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது உயிர் காப்பளர்களாக வசந்த், ரமேஷ், வள்ளிநாயகம் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர்.
இவர்களின் கவனக்குறைவால் இந்த விபரீத விளைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மண்டல மேலாளர் சின்ன பொன்னையா கூறுகையில், குழந்தைகள் நீச்சல் பயிற்சி பெரும்போது அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு காப்பாளர்களுடையது.
இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த உயிர் காப்பாளர்கள் வசந்த், ரமேஷ், வள்ளிநாயகம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே சிறுவன் சாவிற்கு பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரைதையே காரணம் என்று முகமது ஆசிக் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் கூறினர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று டவுன் வழுக்கொடையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஏராளமான ஆண்களும், பெண்களும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.