நிதி மோசடி- 2 ஊராட்சி தலைவர்கள் டிஸ்மிஸ்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிதியை கையாடல் செய்த இரு ஊராட்சித் தலைவர்களை பதவி நீக்கம் செய்து, தமிழக அரசு உத்தரவிடுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..
சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் தேவராஜ். இவர் கடந்த 2005-06ல் ஒதுக்கப்பட்ட அரசு நிதி, மற்றும் 2006-07ல் சட்டசபை தொகுதி நிதி மற்றும் ஊராட்சி நிதியில் முறையற்ற செலவு செய்து, 2 லட்சத்து 21 ஆயிரத்து 42 ரூபாய் கையாடல் செய்துள்ளார்.
அரசு சட்ட திட்ட விதிமுறைகளை மீறி நிதியை தவறாக பயன்படுத்திய காரணத்தால், அரசு விதி முறைகளின்படி ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து தேவராஜ் நீக்கம் செய்யப்பட்டார்.
அதே போன்று இதே மாவட்டத்தில் முடிக்கரை ஊராட்சித் தலைவராக செயல்பட்டு வந்தவர் தென்னரசு.
இவர் கடந்த 2007 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட வேலைக்கு நடைபெற்ற பணியில் பயனாளிகளைப் போல் போலி கையெழுத்தைப் போட்டு, 17 ஆயிரத்து 950 ரூபாய் கையாடல் செய்துள்ளார்.
இதனால் இவரும் ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுள்ளார் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.