வணங்காமண் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படும்-வாசன்
சென்னை: வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படும் என ராஜபக்சே உறுதி கொடுத்துள்ளார். எனவே கப்பல் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்டும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு கடந்த 21ம் தேதி நடந்தது. நேற்று இதன் முடிவுகளை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜிகே வாசன் வெளியிட்டார். சுமார் 4 ஆயிரத்து 540 மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் சுமார் 91.52 சதவீத மாணவர்கள் தகுத் பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரத்பாபு முதலிடத்தை பிடித்துள்ளார். விழா முடிந்த பின்னர் ஜிகே வாசன் நிருபர்களிடம் கூறுகையில்,
கப்பல் துறையின் 100 நாள் செயல் திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அவை வரும் ஜுலை மாதம் 1ம் தேதி டெல்லியில் வெளியிடப்படும். தற்போது அது பற்றி எதுவும் கூற முடியாது.
ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தவித்து கொண்டிருக்கிறது. அந்த கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் தரையிறக்க அந்த நாடு அனுமதி தரவில்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்சே இந்த கப்பல் அனுமதிக்கப்படும் என உறுதி தந்துள்ளார்.
ஆனால், அதில் நடைமுறை சிக்கல் இரு்பபதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு விரைவில் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும். அதற்கான முயற்சியில் இந்திய அரசும், தமிழக அரசும் ஈடுபடும்.
சேது சமுத்திர திட்டம் இந்தியாவுக்கே லாபம் கொடுக்க கூடிய திட்டம். தற்போது இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இது குறித்து ஆராய்ந்து வரும் பச்சோரி கமிட்டி நாட்டின் நலன் கருதி அதன் அறிக்கையை வெளியிடும்.
சேது சமுத்திர திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும். தமிழக துறைமுகங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் வாசன்.