ஜாக்சன் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க 2வது மனைவி கோரிக்கை
மைக்கேல் ஜாக்சனுக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் லிசா மேரி. அவருக்கும், ஜாக்சனுக்கும் இடையிலான உறவில் எந்தக் குழந்தையும் இல்லை.
மேரியை விவாகரத்து செய்த பின்னர் ஜாக்சன், தன்னை கவனித்துக் கொண்ட நர்ஸ் டெபோரா ரோவை கல்யாணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். டெபோராவையும் பின்னர் விவாகரத்து செய்து விட்டார் ஜாக்சன்.
அதன் பின்னர் வளர்ப்புத் தாய் மூலம் இன்னொரு குழந்தையையும் அவர் பெற்றுக் கொண்டார்.
ஜாக்சனுடன் மனைவியர் இல்லாததால், அவரது 3 குழந்தைகளும் தாயார் கேத்தரின் வசம்தான் இருந்து வருகின்றன. தனது குழந்தைகளை படு ரகசியமாக வளர்த்து வந்தார் ஜாக்சன். வெளியுலகுக்கு அதிகம் அறிமுகமாகாத வகையில் தனது குழந்தைகளை பொத்தி வளர்த்து வந்தார்.
தற்போது ஜாக்சன் மறைந்து விட்டதைத் தொடர்ந்து அவரது 3 குழந்தைகளையும் யார் வளர்க்கப் போகிறார்கள் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜாக்சனுக்கும் தனக்கும் இடையே பிறந்த 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என டெபோரா கோரிக்கை விடுத்துள்ளார். ஜாக்சன் தனது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். இனிமேல் அந்தப் பாசத்தை என்னால்தான் தர முடியும் என டெபோரா கூறுகிறாராம்.
இதுகுறித்து டெபோராவின் வழக்கறிஞர் மார்தா அல்ம்லி கூறுகையில், மைக்கேலின் குடும்பம் தற்போதுள்ள துயர நிலையை எண்ணி டெபோரா வருத்தத்தில் உள்ளார்.
இந்தத் துயரம், மைக்கேலின் குழந்தைகளைப் பாதிக்கக் கூடாது என அவர் கவலைப்படுகிறார். குழந்தைகள் மீது சோகம் படிந்து விடக் கூடாது, அவர்கள் இயல்பாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.
ஜாக்சனின் கடைசி காலத்தில் டெபோராவுடன் அவர் நட்புடன்தான் இருந்து வந்தார். எனவே தன்னிடமே தனது குழந்தைகளை ஒப்படைக்க மைக்கேல் குடும்பம் முன்வர வேண்டும் என டெபோரா விரும்புகிறார் என்றார்.
ஜாக்சன் தனக்குப் பின்னர் தனது சொத்துக்களை யார் நிர்வகிப்பது, தனது குழந்தைகள் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் அவர் ஒரு உயில் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி உயில் எழுதி வைக்கப்பட்டிருந்தால், அதில் என்ன உள்ளது என்பதைப் பொறுத்தே ஜாக்சனின் குழந்தைகள் யார் வசம் இருப்பார்கள் என்பது தெரிய வரும்.
ஜாக்சனின் மூத்த மகன் பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன் ஜூனியர். இவனுக்கு 12 வயதாகிறது. பிரின்ஸ் மைக்கேல் என்ற பெயரும் இவனுக்கு உண்டு. 2வது பையனுக்கு 11 வயதாகிறது. பெயர் பாரீஸ் மைக்கோல் காத்தரின் ஜாக்சன்.
வளர்ப்புத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு 7 வயதாகிறது. இவனது பெயர் பிரின்ஸ் மைக்கேல் 2.
3வது மகனான பிரின்ஸ் மைக்கேல் 2வின் தாயார் யார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஒருவேளை அந்தத் தாயார் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறி கோரிக்கை விடுத்தால் அல்லது வழக்கு தொடர்ந்தால் நிலைமை மேலும் சிக்கலாகும்.
தற்போதைய நிலையில் மைக்கேல் ஜாக்சனின் தாயார் கேத்தரீன், தனது பேரப்பிள்ளைகள் மூன்று பேரையும் தானே வளர்க்க விரும்புவதாக தெரிகிறது.
எனவே குழந்தைகளைப் பெற டெபோரா கோர்ட் படியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.