பிஹெச்டி-இந்தியாவை முந்துகிறது சீனா
பெங்களூர்: ஆண்டுதோறும் வெற்றிகரமாக பிஹெச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கையில் சீனா வேகமாக முன்னேறி வருகிறது. இதில் விரைவில் இந்தியாவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
விவசாயத்தில் துவங்கி அனைத்திலும் இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுத்து வரும் சீனா பிஹெச்டி படிப்புகளில் சவால் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் சீனாவில் இந்த வளர்ச்சி 85 சதவீதமாக இருக்கிறது. இதனால் சீனா விரைவில் இந்தியாவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
இதற்கு சீனாவில் ஏற்பட்டு்ள்ள முன்னேற்றம் மட்டுமல்ல இந்தியாவில் பிஹெச்டி படிப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் காரணம்.
இந்தியாவில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் சுமார் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிஹெச்டி பட்டம் வாங்குகின்றனர் என இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
இதனால் இந்தியாவில் விரைவில் பிஹெச்டி பட்டம் முடித்தவர்களுக்கு கடுமையான தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து பிஹெச்டி பட்டம் பெற நினைப்பவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். உயர் கல்வி திட்டத்தில் நிறைய மாறுதல்களை கொண்டு வர வேண்டும். பிஹெச்டி பட்டத்தில் நேரடியாக நுழைய நான்கு ஆண்டு படிப்புகளை கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகள் மத்திய அரசு முன் வைக்கப்பட்டுள்ளது.