ராஜ் தாக்கரே கோர்ட்டில் சரண்-ஜாமீன்
மும்பை: மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று கல்யாண் கோர்ட்டில் சரணடைந்தார்.
கடந்த ஆண்டு கல்யாண் ரயில் நிலையத்திற்கு, ரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்தியர்கள் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் வெறித்தனமான தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் ராஜ் தாக்கரே சார்பில் கல்யாண் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரியும் ஒரு மனு தாக்கல் செய்ய்பட்டது.
இதையடுத்து மகாராஷ்டிர அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதில், ராஜ் தாக்கரேவின் முன்ஜாமீன் மனு தொழில்நுட்ப காரணங்களால் செல்லாது. எனவே அதை நிராகரித்து அவரை தங்களது காவலில் அனுப்ப வேண்டும் என கோரியிருந்தது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜ் தாக்கரேவை போலீஸ் காவலில் அனுமதிக்க இயலாது என்று கூறியது. மேலும், அவரது ஜாமீனையும் ரத்து செய்தது. கல்யாண் கோர்ட்டில் ஜூன் மாத இறுதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் தாக்கரேவுக்கு உத்தரவிட்டது.
அதன்படி இன்று தனது மனைவியுடன் கல்யாண் கோர்ட்டுக்கு வந்தார் ராஜ் தாக்கரே. அவருடன் ஏராளமான தொண்டர்களும் வந்தனர்.
அங்கு சரணடைந்த அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.