சென்னையை தகர்க்க திட்டமிட்டோம்-லஷ்கர் ஒப்புதல்
பெங்களூர்: கடந்த 2008ல் பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய சமயத்தில் சென்னையிலும் தாக்குதல் நடத்தி திட்டமிட்டிருந்தோம். ஆனால், கடைசி சமயத்தில் அது மாற்றப்பட்டுவிட்டது என போலீஸ் விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தெரிவித்துள்ளான்.
கடந்த 2008ல் பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் சர்பரஷ் நவாஸ் என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாங்கள் சென்னையை தகர்க்க திட்டமிட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்ட பெங்களூரில் மட்டும் குண்டு வைக்க முடிவு செய்யப்பட்டது என அவன் தெரிவித்துள்ளான்.
சர்பரஷ் நவாசும், முகாஜிதின் அமைப்பை சேர்ந்த உம்மர் ஹாஜி என்ற கேரளாவை சேர்ந்த நபரும் சென்னை மற்றும் பெங்களூரில் குண்டு வைப்பது தொடர்பாக வங்கதேசம் சென்று திரும்பி அங்கு இருக்கும் லஷ்கர் இயக்க தலைவர்களை சந்தித்து திட்டங்களுடன் வந்துள்ளனர்.
ஆனால், கடைசி நேரத்தில் சென்னையில் குண்டு வைக்க வேண்டாம். அந்த திட்டத்தை ஒத்திவைத்துவிடுமாறு வளைகுடா பகுதிக்கான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் வாலி என்ற ரீகன் என்ற ஷமீம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் மட்டும் தொடர் குண்டு வெடிப்பை நடத்த உத்தரவிட்டு்ள்ளார்.
ஒரே சமயத்தில் இரண்டு ஊர்களில் தாக்குதல் நடத்துவதற்கு அதிக அளவில் ஆள்பலம் தேவை என்பதாலும், ஒரு வேளை தோல்வியில் முடிந்தால் மிகப்பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதாலும் இரண்டு நகரங்களிலும தாக்குதல் நடத்துவதை ஒத்தி வைத்ததாக தெரிகிறது.
மேலும், பெங்களூர் தான் தற்போது இந்தியாவின் முக்கிய நகரம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு குண்டு வைத்தால் உலகத்தின் கவனத்தை நம் பகக்ம் கொண்டு வரலாம் என ஷமீம் சர்பரஸிடம் கூறியுள்ளான்.
சென்னையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட உம்மர் ஹாஜியிடம் இது குறித்து எடுத்து கூறி அவரை சமாதானம் செய்து, குண்டுவெடிப்பை ஒத்திப்போடும் பொறுப்பையும் ஷமீம், சர்பரஸிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தேவையான ரூ. 2 லட்சத்தையும் ஷமீம் தான் கொடுத்துள்ளான்.