வீட்டு கடன் வட்டி 7.5 % ஆக குறைப்பு-ஜெய்பால்
டெல்லி: ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் கட்ட வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.5 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் வரும் 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது குறித்து நேற்று மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் தனது துறைக்கான 100 நாள் செயல் திட்டத்தை அறிவித்தார். அவர் கூறுகையில்,
பிரணாப் முகர்ஜியிடம் பட்ஜெட் குறித்து ஆலோசித்தேன். தற்போது ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் வீட்டு கடன்களை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளேன். வட்டி குறைத்தால் மக்கள் வீடுகளை வாங்குவார்கள்.
தற்போது ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கான வட்டி 9.25 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வசூல் செய்யப்படுகிறது. அதை 7.5 சதவீதமாக குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளேன். ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான மதிப்பு கொண்ட வீடுகளை கட்ட வாங்கப்படும் கடன்களுக்கு 6.5 சதவீதம் வட்டி வசூலிக்கும் திட்டமும் இருக்கிறது.
வீடுகள் மூலம் வரும் வருமானத்துக்கு இதுவரை 30 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதை 50 சதவீதமாக உயர்த்த முயற்சித்து வருகிறேன். பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகள் கடந்த ஆண்டை போலவே இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி, டெல்லி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் மற்றும் ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் துவக்கப்படும். இதற்கான அடிக்கல் விரைவில் நாடப்படும்.
நகரங்களில் 20 இருக்கைகளுக்கு மேல் இருக்கும் பேருந்துகளுக்கு வாட் மற்றும் மத்திய கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சியில் ஏசி அரசு பேருந்து இயக்க மத்திய அரசு நீதி உதவி அளிக்கும்.
இதில் சென்னைக்கு 1000 பேருந்துகளும் மற்ற நகர்களுக்கு தலா 300 பஸ்களும் வழங்கப்படும் என்றார் ஜெய்பால் ரெட்டி.