ஆபரேஷன் செய்த துப்புரவு தொழிலாளி-மபி.யில் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசம் மாநில அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் மூன்று வயது குழந்தைக்கு ஆபரேஷன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள குலாப் காலனியை சேர்ந்தவர் சஞ்சீவன் மிஸ்ரா. இவர் தனது மூன்று வயது குழந்தை ஆர்பித்துடன் நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஆர்.சி.மிஸ்ரா என்பவர் அந்த குழந்தையின் கழுத்தில் லேசான கட்டி இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் சிறிய ஆபரேஷன் செய்தால் கட்டியை அகற்றிவிடலாம் என கூறி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த ராம் சரண் என்பவரை அழைத்து குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து போக சொன்னார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்று பார்த்த போது குழந்தை அங்கு இல்லாததை கண்டு விசாரித்தார். அப்போது துப்புரவு தொழிலாளி ராம்சரண் குழந்தைக்கு ஆபரேஷன் செய்து வார்டில் சேர்த்துவிட்டதாக அங்கிருந்த மற்றொரு ஊழியர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அறிந்த குழந்தையின் தந்தை அதிர்ச்சியடைந்தார். துப்புரவு தொழிலாளி ராம்சரண் தன்னை டாக்டர் ஆபரேஷன் செய்யுமாறு கூறினார் என்றார். ஆனால், டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லுங்கள் என்று தான் கூறினேன் என்கிறார்.
இருவரும் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் பலி போட்டு வந்தாலும், அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் நல்ல நிலையில் இருக்கிறது. துப்புரவு தொழிலாளி ராம்சரண் மருத்துவமனையில் ஆபரேஷன் போது டாக்டர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். அந்த அனுவத்தில் ஆபரேஷன் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச சுகாதார துறை விசாரணைக்கு உத்தரவி்ட்டுள்ளது.