பாலு வெற்றியை எதிர்த்து மூர்த்தி; அதிமுக வெற்றியை எதிர்த்து சாருபாலா மனு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்.பி டி.ஆர்.பாலுவின் வெற்றியை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டு தோற்ற ஏ.கே.மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதே போல திருச்சி தொகுதியில் தோற்ற காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவும் தன்னை எதிர்த்து வென்ற அதிமுக வேட்பாளர் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும், பாமக சார்பில் நானும் போட்டியிட்டோம். தேர்தலில் தில்லுமுல்லு செய்து டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாலு தரப்பினர் 11 லட்சம் வாக்காளர்களுக்கு சாதனைப் புத்தகம் வழங்கினர். இதற்காக மட்டும் ரூ.2 கோடி செலவிடப்பட்டது. தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளார். ஓட்டுப்பதிவு எந்திரத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மூர்த்தி.
சாருபாலா தொண்டைமானும்...
அதேபோல திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்ற முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமானும் தன்னை எதிர்த்து வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில்,
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நான் போட்டியிட்டேன். அதிமுக சார்பில் குமார், தேமுதிக சார்பில் விஜயகுமார், பாஜக ர்பில் லலிதா குமாரமங்கலம், லட்சிய தி.மு.க. சார்பில் மன்சூர்அலிகான் உள்பட 24 பேர் போட்டியிட்டனர்.
அதிமுக வேட்பாளர் குமார் 2,98,710 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எனக்கு 2,94,375 ஓட்டுகள் கிடைத்தன. 4,000 ஓட்டுகள் தான் வித்தியாசம்.
ஏராளமான இடங்களில் அதிமுகவினர் ஓட்டுக்காக பணம் கொடுத்து உள்ளனர். தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபைக்கு உட்பட்ட தொகுதியில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளது. ரேசன் கார்டு வைத்திருந்தவர்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இது எனது வெற்றியை பாதித்துள்ளது.
எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.