கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் பாலிடெக்னிக் பாடம்!
சென்னை: இந்த ஆண்டு முதல் கலைக் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இதன் மூலம் கலைக் கல்லூரி மாணவர்களும் பாலிடெக்னிக் தொழில் பாடங்களைப் படிக்கலாம். இது அவர்களது எதிர்கால வேலை வாய்ப்புக்கு வசதியாக அமையும்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொன்முடி அளித்த பதில்:
பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் என்று அழைக்கப்பட்டன. அவ்வாறு சொல்வதால் அது 'பல்' தொடர்பாக படிப்பு என்ற எண்ணத் தோன்றுகிறது.
எனவே பாலிடெக்னிக் கல்லூரிகளை பலவகை தொழில்நுட்பக் கல்லூரி என அழைக்கலாம் என்று முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே இனி அவை அவ்வாறே அழைக்கப்படும்.
தமிழ்நாட்டில் 317 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இதில் 37 கல்லூரிகளில் ஜவுளி பற்றிய பட்டயப் படிப்புகள் உள்ளன. சென்னை, கோவையில்தான் அதிக அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.
தொழில் முறைக் கல்வியை கலைக் கல்லூரி மாணவர்களும் படிக்க விரும்புகிறார்கள். எனவே இந்த ஆண்டு முதல் கலைக் கல்லூரிகளில் ஷிப்டு முறையில் பாலிடெக்னிக் பாடங்களும் கற்பிக்கப்படும். இதன் மூலம் கலைக் கல்லூரி மாணவர்களும் பாலிடெக்னிக் பாடங்களை படிக்கலாம். எதிர்கால தொழில் வாய்ப்புக்கு அது வசதியாக அமையும்.
கடந்த 3 ஆண்டுகளில் 7 கலைக் கல்லூரிகளையும், 11 பொறியியல் கல்லூரிகளையும் அரசு தொடங்கி உள்ளது. கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தொடங்கப்படும்.
அருந்ததியருக்கு கல்வி வாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை அந்த அளவுக்கு அருந்ததியர் மாணவர்கள் சேராவிட்டால் மீதமுள்ள இடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அதை வழங்கலாம்.
கலைக் கல்லூரிகளில் 'ஷிப்டு' முறையிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 'ஷிப்டு' முறையில் எந்த பாடத்தையும் ஆரம்பிக்கலாம் என்று கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. போன்ற படிப்புகளில் பழங்குடி மாணவர்கள் அதிக அளவில் சேருவதில்லை என்ற நிலை உள்ளது. இந்த குறையை போக்க பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அரசு முயற்சி செய்யும் என்றார் பொன்முடி.