ஆட்டோ ஓட்டுனர் மீது தபால் மூலம் புகார் தரலாம்!
சென்னையில் 50,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. விதிகளை மீறியதாக கடந்த 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந் நிலையில் அஞ்சல் அட்டைகள் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது புகார் தெரிவிக்கும் திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் இன்று துவக்கி வைத்தார்.
இதன்படி கூடுதல் கட்டணம் கோருவது உள்பட பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆட்டோ டிரைவர்கள் மீது அஞ்சல் அட்டை மூலம் போலீசாருக்கு புகார் அனுப்பலாம்.
இதற்காக 10,000 அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படவுள்ளன.
மேலும் ஆட்டோக்களில் 5 பள்ளிக் குழந்தைகளுக்கு மேலும் வேன்களில் 18 குழந்தைகளுக்கு மேலும் ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஷகீல் அக்தர் அறிவித்துள்ளார்.
வரும் 1ம் தேதி முதல் இந்த விதி கடுமையாக பின்பற்றப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் பள்ளி வேன் ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் 6 வருட வாகன ஓட்டும் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.