மாணவனை கண்டுபிடிக்க உதவிய எஸ்.எம்.எஸ்
சென்னை: காணாமல் போய் மயங்கிய நிலையில் கிடந்த மாணவனை போலீஸார் மீட்க ஒரு எஸ்.எம்.எஸ். உதவியுள்ளது.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பு வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் புவனேஷ் (10). 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
காலனியில் விளையாடிக் கொண்டிருந்த புவனேஷை திடீரெனக் காணவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கணேஷ் இதுகுறித்து மூலம் மை சன் லாஸ்ட் என மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனின் புகார் பிரிவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
இதையடுத்து ஆணையர் உத்தரவுப்படி வேளச்சேரி போலீஸார் தேடுதலில் குதித்தனர்.
கணேஷின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு புவனேஷின் படத்தை வாங்கிக் கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்டோ டிரைவர்களிடம் புவனேஷ் படத்தை காட்டி விசாரித்தனர்.
அப்போது ஒரு ஆட்டோ டிரைவர் புவனேஷை வேளச்சேரி பஸ் நிலையத்தில் பார்த்ததாக தெரிவித்தார். அவரது உதவியோடு பஸ் நிலையத்தில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த புவனேஷை போலீசார் மீட்டனர்.
என்ன ஏது என்று அவனிடம் விசாரித்தபோது, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மயங்கிய நிலையில் பஸ் நிலையத்தில் இருந்தேன் என்று கூறியுள்ளான் புவனேஷ்.
அவனை யாரேனும் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
காலை 9 மணிக்கு எஸ்.எம்.எஸ். தகவல் கொடுத்தார் கணேஷ். அடுத்த 20 நிமிடத்தில் மாணவன் மீட்கப்பட்டு விட்டான்.
சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் இப்போது எஸ்.எம்.எஸ். பிரிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் எந்தவிதமான புகாரையும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம். அதன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அலர்ட் செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மக்களிடையே இந்த எஸ்.எம்.எஸ். புகார் வசதி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று ஒரு மாணவனைக் காத்துள்ளது.