ஜாக்சன் உடலுக்கு 2வது முறையாக பிரேதப் பரிசோதனை நடந்தது
லாஸ் ஏஞ்செலஸ்: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக அவரது குடும்பத்தினர் தனியாக பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஜாக்சன் மறைவுக்கு முன்பும் சர்ச்சைகளுடன் வாழ்ந்தார். இறந்த பின்னரும் எப்படி இறந்தார் என்பதில் குழப்பமும், சர்ச்சையும் நிலவி வருகிறது.
ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைவதற்கு முன்பு அவருடன் கடைசியாக இருந்தவர் டாக்டர் கோன்ராட் முரே என்பவர். அவர் ஜாக்சன் மறைவுக்குப் பின்னர் காணாமல் போய் விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் டாக்டரை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து விட்டனர்.
முரே போட்ட ஊசிக்குப் பின்னர்தான் ஜாக்சன் மறைந்ததாக ஒரு தகவல் உள்ளது. மேலும் ஓவர் டோஸ் மருந்துகளும் ஜாக்சன் உயிரைக் குடித்து விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதனால் அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனையை முடித்த போலீஸார் முடிவை மட்டும் அறிவிக்கவில்லை. மேலும் சில சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர். உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜாக்சனின் குடும்பத்தினர் தனியாக ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த தீர்மானித்துள்ளதாக அவரது குடும்ப நண்பரான பாதிரியார் ஜெஸி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மீண்டும் ஒரு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. எங்கு வைத்து இந்தப் பரிசோதனை நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஜாக்சனின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.