ஒகனேக்கல் திட்டத்தை ஏற்க மாட்டோம் - கர்நாடகம்
பெங்களூர்: ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் தலையிட்டு சுமூக முடிவு காண உதவ வேண்டும். இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 1334 கோடி மதிப்பிலான ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும். கடந்த ஆண்டு கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை மூளாமல் தடுக்கவே திட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டார். தற்போது திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. 2012ம் ஆண்டுக்குள் இத்திட்டம் முடிவடையும் என்று கூறியிருந்தார்.
இதற்கு கர்நாடகம் உடனடியாக பதிலளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தின் நிலையில் மாற்றம் இல்லை. திட்ட இடம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கர்நாடகம் ஏற்கனவே தெளிவா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீட்டையும் அது கோரியுள்ளது.
பிரதமர் இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும். பிரச்சினை சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம் என்றார் பொம்மை.