ரூ. 1400 கோடியில் ரயில் திட்டம்: தமிழர்களுக்கு?
கொழும்பு: முகாம்களில் தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கு சோறு போடுவதற்கு காசு இல்லை என கூறி அவர்களது வளர்ச்சிக்காக எந்த திட்டத்தை அறிவிக்காத இலங்கை அரசு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நகரங்களை இணைக்க உதுரு மிதுரு என்ற ரயில் திட்டத்தை சுமார் 1400 கோடி செலவில் மேற்கொள்ள இருக்கிறது.
இதையடுத்து இந்த ரயில் திட்டத்தில் இலங்கை அதிக கவனம் செலுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. இந்த போரின் போது வடக்கு பகுதியில் தண்டவாளங்கள் சிதைக்கப்பட்டன.
போர் முடிந்தவிட்ட போதிலும் அங்கு தமிழர்கள் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் வேலிகளுக்கு மத்தியில் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் தற்போது வவுனியா முதல் கன்கசன்துறை வரை தான் ரயில் தண்டவாளம் இருக்கிறது. அங்கிருந்து வடக்கே செல்லும் ரயில் பாதைகள் சிதைக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.
மற்ற பகுதிகளில் இருக்கும் தண்டவாளங்களை சீரமைக்கவும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ரூ. 1400 கோடி மதிப்பில் உதுரு மிதுரு என்ற திட்டம் மூலம் ரயில் விடவும் அதிபர் மகிந்தா ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
போர் முடிந்த நிலையில் தமிழர்களின் வளர்ச்சி பணிகளுக்கு உதவுவதற்கு தங்களிடம் கையில் சுத்தமாக பணமில்லை என்று தெரிவித்த ராஜபக்சே தற்போது கோடி கணக்கில் செலவு செய்து, தமிழர்கள் அதிகம் நிறைந்த வடக்கு பகுதிகளில் சிங்களர்களை மெல்ல மெல்ல நுழைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது போன்ற திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்பு தமிழர்கள் அனைவருக்கும் வீடு, உணவு, மருந்து, வேலை போன்றவைகள் கிடைக்க அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக வவுனியாவில் இருந்து வடக்கு பகுதிக்கும், கன்கசன்துறையில் இருந்து தெற்கு நோக்கியும் புதிய இருப்புபாதைகளை போடவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இரண்டாவது கட்டமாக நச்சிகுதா பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இருப்பு பாதைகள் அமைக்கப்படும் என இலங்கை ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இலங்கை கல்வி அமைச்சகம் யானையிறவு ரயில் நிலையத்தை வடக்கில் வாழும் மக்களுக்கு அன்பின் பரிசாக கொடுப்பதாக கூறியுள்ளது. இந்த ரயில் நிலைய சீரமைப்பு பணிகளுக்கு இலங்கை மாணவர்களிடம் இருந்து ரூ. 2 வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை அரசு ரூ. 2 கோடி செலவில் ஓமந்தை ரயில் நிலையத்தை செப்பனிட்டு வருகிறது.