கண்ணப்பன் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு-டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் சகோதரர் செந்தாமரை தாக்கப்பபட்டு, பணம் பறிக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளை தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிவகங்கை அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் செந்தாமரை. இவர் கண்ணப்பனின் சகோதரர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
நாடாளுமன்ற தேர்தலில் எனது சகோதரர் கண்ணப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.
அப்போது, மே 12ம் தேதி இளையான்குடி சென்று விட்டு திரும்பும் போது திமுக ஒன்றிய செயலாளர் மதியரசன், தொடக்க விவசாய கூட்டுறவு வங்கி நிர்வாகி உதயகுமார் தலைமையில் 3 கார்களில் வந்த சிலர் என்னை தாக்கி, எனது காரில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் 5 ஆயிரம் ரூபாயை மட்டும் திருடி சென்றதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்எஸ் ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக டிஜிபி, சிவகங்கை எஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.