சென்னை விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டுகள்!
மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சர்வதேச முனையத்துக்கும், உள்நாட்டு முனையத்துக்கும் இடையே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை மர்மான முறையில் சில பொருட்கள் இருந்தன.
உருளை வடிவிலான இரும்புக் குண்டும், நீளமான இரும்பு பைப்பும் இருந்ததைப் பார்த்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்து பரிசோதித்தபோது அதிலிருந்து சத்தம் வந்தது.
இதையடுத்து அது வெடிகுண்டு என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மணல் மூடைகளைப் போட்டு இரும்பு குண்டையும், பைப்பையும் நிபுணர்கள் அகற்றினர். பின்னர் அது செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில், டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் திகழும் சென்னை விமான நிலையத்தில் பைப் குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.