என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ்
இத் தகவலை ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் துணைத் தலைவர் மணிவாசகம் அறிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி ஜூன் 28 முதல் இந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவானது. இதையடுத்து இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என என்எல்சி நிர்வாகம் அறிவித்தது.
இந் நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது குறித்து மணிவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவல் துறையின் கடுமையான அடக்குமுறை காரணமாகவும், முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், உடன்பாட்டை அமலாக்க மறுக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் திட்டவட்டமான தொழிற்சங்க விரோதப் போக்கை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்வது என்றும்,
இந்தப் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் தீர்வுகாண வலியுறுத்தியும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வது என ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று, அடக்கு முறைகளை கைவிட தமிழக அரசை சங்கம் கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
236 பேர் கைது...
முன்னதாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து என்எல்சி நிர்வாக அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த போவதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி கியூ பாலம் அருகே கடலூர் ஏ.டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொருளாளர் செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட சுமார் 236 பேரை கைது செய்தனர்.