வங்கி மேனேஜரை அடித்த காங். எம்.பி. மீது வழக்கு-சோனியா நோட்டீஸ்
ஹைதராபாத்: தான் பரிந்துரைக் கடிதம் கொடுத்த விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்காததால் ஆத்திரமடைந்து வங்கி மேனேஜரை மிருகத்தனமாக அடித்து உதைத்த காங்கிரஸ் எம்.பி. மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட எம்.பிக்கு விளக்கம் அளிக்குமாறு கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நாகர்கர்னூல் தொகுதி எம்.பியாக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்டா ஜெகன்னாதம். இவர் தன்னை அணுகிய விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்குமாறு ஆந்திர பிரதேசஷ் கிராமீன் விகாஸ் வங்கிக்கு பரி்ந்துரைக் கடிதம் தந்தார்.
ஏகப்பட்ட பேருக்கு கடிதம் கொடுத்ததால் அதை வாங்க மறுத்து விட்டார் வங்கி மேலாளர் ரவீந்தர் ரெட்டி.
இதையடுத்து வங்கிக்கு விரைந்த எம்.பி. தாறுமாறாகப் பேசியபடி மேனேஜரை அத்தனை பேர் முன்னிலையிலும் கடுமையாக தாக்கி விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ரவீந்தர் ரெட்டி கூறுகையில், எம்.பி. நிறையப் பேருக்கு பரிந்துரைக் கடிதங்களைக் கொடுத்திருந்தார். அத்தனை பேருக்கும் ஒரே நாளில் லோன் வழங்க முடியாது. காரணம், ஏகப்பட்ட பார்மாலிட்டிகள் உள்ளன. அவற்றை முடிக்காமல் எப்படி கடன் தர முடியும்.
இதை நான் அவரிடம் விளக்கிக் கூறியபோதும், அதை ஏற்க மறுத்து என்னை அடித்து விட்டார் என்றார்.
ஆனால் மேனேஜர் குடிபோதையில் இரு்நததாகவும், தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் எம்.பி.
இந்த நிலையில் போலீஸார் எம்.பி. மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோனியா நோட்டீஸ்...
இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி எம்.பி. ஜெகன்னாதத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.