மசூதி இடிப்பு-சங் பரிவார் மீது லிபரான் குற்றச்சாட்டு?
அத்வானி உள்ளிட்டோர் குற்றவாளிகள்..
இந்த அறிக்கையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, கல்யாண் சிங் உள்ளிட்ட சங் பரிவார் தலைவர்கள் குற்றவாளிகள் என நீதிபதி லிபரான் தெரிவித்துள்ளாக தகவல்கள் கூறுகின்றன.
அத்வானியும், சங் பரி்வார் தலைவர்களும் சேர்ந்து செய்த கூட்டுச் சதியால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையே, பாபர் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணமாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அத்வானி ரத யாத்திரையின்போது அயோத்தியில் கர சேவகர்கள் என்ற பெயரில் குவிந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தாதும், மசூதி இடிக்கப்பட முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விசாரணையை முடக்க முயன்ற கல்யாண்..
அத்வானி தவிர அப்போதைய உ.பி. முதல்வர் கல்யாண் சிங், உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், வினய் கத்தியார் உள்ளிட்டோரும் டிசம்பர் 6ம் தேதி நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விசாரணையை நடத்த விடாமல் முடக்க முயன்றதாக கல்யாண் சிங் மீது கூடுதலாக ஒரு குற்றச்சாட்டையும் லிபரான் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தடுக்க முயலாத நரசிம்ம ராவ்...
காங்கிரஸ் தரப்பில் மறைந்த பிரதமர் நரசிம்ம ராவின் பெயர் மட்டுமே குற்றச்சாட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முயலாமல், மெளனம் காத்து செயலிழந்திருந்தார் ராவ் என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கையின் பெரும்பாலான பகுதிகளில் அத்வானி மற்றும் சங் பரி்வார் அமைப்புகளின் தலைவர்களை குற்றம் சாட்டுவதிலேயே போயுள்ளதாம்.
அத்வானி ரத யாத்திரை நடத்தியது தவறு. மேலும், அதுதொடர்பாக கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் விட்டது இன்னொரு தவறு. மசூதி இடிப்பின்போது அயோத்தி இடம் பெற்றுள்ள பைசலாபாத் மாவட்ட நிர்வாகம் நடந்து கொண்ட முறையையும் லிபரான் கமிஷன் விமர்சித்துள்ளது.
விசாரணை நடந்து வந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு பல காரணங்களையும் கூறியுள்ளாராம் லிபரான். முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் பல்வேறு உபாயங்களை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதை அவர் நேரடியாக குறிப்பிடாமல் சில தலைவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
லிபரான் கமிஷன் அறிக்கையை ஆறு மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்பது அரசு விதி. மேலும் இந்த அறிக்கையை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கவுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரி்ந்துரைகளின் பேரில் அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவில்லை.
ஒரு வேளை சதித் திட்டம் குறித்து லிபரான் தெரிவித்துள்ள கருத்துக்களை மேலும் விசாரிக்க அரசு விரும்பினால் சிபிஐ வசம் அது ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த அறிக்கையை வைத்து பாஜகவுக்கு எதிராக தனது நிலையை ஸ்திரப்படுத்த காங்கிரஸ் முயலும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு பாஜக உள்ளிட்ட சங் பரி்வார் தலைவர்கள் மீது லிபரான் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், லிபரான் கமிஷன் அறிக்கையை சமாளிக்கும் வகையில் பாஜகவும் திட்டமிட்டு வருகிறது.