தேசிய கொடி ஏற்றும் நிபந்தனை: குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தேசியக் கொடியை எரிக்க முயன்ற வழக்கில் கைதான 3 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய கடமைகளை தெரிந்து கொள்வது குறித்தும், அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்றும் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழர் தேசிய இயக்கம், தமிழர் பொதுவுடமை கட்சி ஆகியவற்றின் சார்பில் கோவையில் நடந்த போராட்டத்தில் தேசியக் கொடியை எரிக்க முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, 8 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த 8 பேரும் ஒரு வாரத்திற்கு தங்கள் வீட்டு முன் கலையில் தேசியக் கோடி ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
ஆனால் இந்த நிபந்தனையை தமிழரசன், பாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த ஏற்க மறுத்ததோடு, கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி இன்னொரு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறியதாவது:
தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து சிறையிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டம் 5வது பிரிவு தேசியக் கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தி்ன் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி எடுத்துக் கூறுகிறது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய கடமைகளை தெரிந்து கொள்வது குறித்தும், அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.