மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் 'மைக்' உடைப்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி கவுன்சலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மைக்குகள் உடைக்கப்பட்டன. நகர மன்ற தலைவரின் பெயர் பலகை உடைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சத்தியவதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது திமுக கவுன்சிலர் வெள்ளிங்கிரி, மேட்டுப்பாளையத்தி்ல் இருக்கும் நான்கு மண்டலத்தில் ஒவ்வொன்றிலும் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு வரி வசூல் செய்யப்படுகிறது? என வினா எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தலைவர் சத்தியவதி இது பற்றி எனக்கு தெரியாது. அதிகாரிகளிடம் கேளுங்கள் என்றார்.
இது தொடர்பாக கவுன்சிலர் வெள்ளியங்கிரிக்கும் நகர் மன்றத் தலைவர் சத்தியவதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திமுக கவுன்சிலரின் கேள்விகளால் எரிச்சலடைந்த நகர் மன்ற தலைவர் சத்தியவதி கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதனால் மேலும் ஆவேசம் அடைந்த கவுன்சிலர் வெள்ளியங்கிரி நகர் மன்ற தலைவர் டேபிள் மீதிருந்த இரண்டு மைக்குகளை கீழே போட்டு உடைத்தார்.
மற்றொரு கவுன்சிலர் முருகேசன் என்பவர் ஒன்றும் தெரியாத தலைவருக்கு பெயர்ப் பலகை மட்டும் தேவையா என்று கூறி பெயர்ப் பலகையை உடைத்தார். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.