For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவிகளை சேலை அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மாணவிகள் சேலைதான் கட்டி வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்த முடியாது. சுடிதார் அணியக் கூடாது என தடுக்கவும் முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை போரூரில் உள்ள வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் முடித்தவர் கமலம். தற்போது ஹவுஸ் சர்ஜனாக உள்ளார்.

இந்த நிலையில், ஹவுஸ் சர்ஜனாக இருப்பவர்கள் சேலைதான் அணிந்து வர வேண்டும். சுடிதார் போடக் கூடாது என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து மாணவி கமலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நான் இதுவரை சேலையே கட்டியதில்லை. சுடிதார், குர்தா போன்றவை அணிந்துதான் பழக்கம். எனவே என்னை சேலை கட்டி வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். கமலம் சார்பில் பிரபல வக்கீல் அருள்மொழி ஆஜரானார்.

இந்த வழக்கு அனைவரின் ஆர்வத்தையும் ஈர்த்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது நீதிபதி கூறுகையில், சேலையா-சுடிதாரா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ஹோமியோபதி மருத்துவம் படித்த மாணவி தொடர்ந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும், மாணவியும் சுமுகமாக பேசி முடித்திருக்க வேண்டும். ஆனால், வக்கீல் நோட்டீஸ், தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார், கோர்ட்டில் வழக்கு என்று பல திசைகளில் சென்றிருப்பது வருந்தத்தக்கது.

ஒரு கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவிகள் குறிப்பிட்ட உடையை தான் அணிய வேண்டும் என்று கூற காரணம் இருக்கிறதா? அல்லது பகுத்தறிவற்ற செயலா? என்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் முன்பெல்லாம் முழு நீள பாவாடை-தாவணி சீருடையாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும். இந்த உடை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது பெரும்பாலான பள்ளிகளில் சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை அனுமதிக்கிறார்கள். பல பள்ளிகளில் இதை சீருடையாகவே மாற்றி விட்டனர்.

கல்லூரி அளவிலும் இத்தகைய உடைகள் நாகரிகமான உடையாக கருதப்படுகிறது. இதை அநாகரீகமாக கருத முடியாது.

நமது நீதிமன்றத்தின் பெண் உதவியாளர்கள் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை அணிய ஐகோர்ட்டின் நிர்வாக குழு அனுமதித்துள்ளது. அவர்களும் அதை விரும்பி அணிந்து வருகிறார்கள்.

சுடிதாரும் கண்ணியமான உடைதான்..

கண்ணியமான உடைதானா என்று ஆராயும்போது சேலை மட்டும்தான் கண்ணியமானது. சுடிதார், சல்வார் கமிஸ் ஆகியவற்றுக்கு கண்ணியமில்லை என்று கற்பனை அளவிலும் கூறுவதை ஏற்க முடியாது.

அடுத்த கேள்வி, இதற்கு விதிமுறை ஏதேனும் உண்டா என்பதுதான். சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேலைதான் கட்டவேண்டும். துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் போன்றவற்றை அணியக்கூடாது என்பதற்கு விதிமுறைகள் எதுவும் இல்லை. அதுபோன்ற விதிமுறைகளை கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் இதற்காக எந்த விதிமுறையையும் உருவாக்கவில்லை. விதிமுறை ஏதேனும் இல்லாத பட்சத்தில் சேலைதான் கட்டவேண்டும் என்று கூற முடியாது.

துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரும், சல்வார் கமிசும் கண்ணியமற்ற உடை என்று யாரும் கருதவில்லை. இந்த உடைகள் உடம்பு முழுவதையும் மறைக்கும். இப்படிப்பட்ட உடைகளை அணியக்கூடாது என்று கல்லூரி கூறுவதை அனுமதிக்க முடியாது.

ஆகவே, மாணவி தனது பயிற்சி காலம் முழுவதும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் ஆடைகளை அணிந்து செல்லலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X