விமான விபத்து: கடலில் நீந்தி பிழைத்த சிறுமி
மொரானி: காமரூஸ் தீவுக்கு அருகே விபத்துக்குள்ள ஏமன் விமான விபத்தில், 14 வயது சிறுமி கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏமன் நாட்டுக்குச் சொந்தமான விமானம் நேற்று காமரூஸ் தீவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 153 பேர் உயிரிழந்தனர். ஆனால் அனைவரும் வியப்படையும் வகையில் ஒரே ஒரு சிறுமி மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
அந்த சிறுமியின் வயது 14. கடலில் விமானம் விழுந்ததும், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நீந்தி வந்து உயிர் பிழைத்துள்ளார் அந்த சிறுமி.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியை மீட்புப் படையினர் மீட்டு கொண்டு வந்தனர்.
இன்னும் அதிர்ச்சியிலிருந்த மீளாத அந்த சிறுமி, மரோனி நகரில் உள்ள எல் மரூப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை பயப்படும்படியாக இல்லை என்று செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் ரமுலாட்டி பென் அலி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த விபத்தில் இந்த சிறுமியைத் தவிர மற்ற யாருமே பிழைத்ததாக தெரியவில்லை. இந்த சிறுமி அதிகாலை 4 மணியளவில் கடலில் நீந்தியபடி காணப்பட்டார். அவரைச் சுற்றிலும் இறந்தவர்களின் உடல்கள் மிதந்தபடி இருந்தன.
மீட்புப் படையினர் இதைப் பார்த்து அங்கு விரைந்தனர். அவர் தப்பி வருவதற்காக ஒரு மிதவை போடப்பட்டது. ஆனால் அதை சிறுமியால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மீட்புப் படை வீரர் கடலுக்குள் குதித்து அந்த சிறுமியை மீட்ட மேலே கொண்டு வந்தார்.
அவரது உடல் வேகமாக நடுங்கியபடி இருந்தது. இதையடுத்து அவருக்கு நான்கு உடைகள் அணிவிக்கப்பட்டு அவர் சமாதானப்படுததப்பட்டார். அவருக்கு சூடான இனிப்பு கலந்த தண்ணீர் போன்றவை தரப்பட்டது.
தற்போது அந்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நினைவு உள்ளது. பேசுகிறார். இருப்பினும் அவர் சற்று நார்மல் ஆன பின்னர் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவுள்ளோம் என்றார்.
அந்த சிறுமி பிரான்ஸின் தென் பகுதி நகரான மார்ஷலைச் சேர்ந்தவர். தனது தாயாருடன் காமரூஸ் வந்து கொண்டிருந்தபோதுதான் விபத்தில் சிக்கிக் கொண்டார்.
அந்த சிறுமியின் பெயர் பகாரி பயா என்று அறியப்பட்டுள்ளது. அவருக்கு உடல் நலம் தேறிய பின்னர் பிரான்ஸ் அல்லது மடகாஸ்கருக்கு அவரை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு..
இதற்கிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வெளியாகும் சிக்னல்கள் பெறப்பட்டுள்ளனவாம். இதையடுத்து கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சியில் வீரர்கள் இறங்கியுள்ளனர்.
பிரான்ஸ் கடற்படை வீரர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.