வெளிநாட்டு விமான சேவை-குறைக்கும் ஏர் இந்தியா
டெல்லி: பொருளாதார நெருக்கடி காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் ரொம்பவே திணறி வருகிறது. இதையடுத்து சர்வதேச விமான சேவைகளை குறைத்துவிட்டு உள்ளூர் சேவைகளில் கவனம் செலுத்த போவதாக தெரிகிறது.
உலக பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெரிய இந்திய நிறுவனம் என்றால் அது ஏர் இந்தியாவாக தான் இருக்கும். அந்த அளவுக்கு பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இருந்தும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.
தற்போது சர்வதேச விமான சேவைகளை குறைத்துவிட்டு டெல்லி, சென்னை, மும்பை என உள்ளூர் சேவையில் கூடுதல் கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான, குறைந்த விலையில் சேவை புரிந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அபுதாபி, பக்ரைன், சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற நகரங்களுக்கான சேவையை நிறுத்த இருக்கிறது.
இதற்கு பதிலாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபத் போன்ற நகரங்களுக்கு இடையே கூடுதல் விமானங்களை இயக்க தி்ட்டமி்ட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
இதை ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், கார்பரேட் நிறுவன அதிகாரிகள் உள்ளூரில் குறைந்த கட்டணத்தில் பறப்பதை அதிகம் விரும்ப துவங்கியுள்ளனர். இதனால் உள்ளூர் சேவையை அதிகரிக்க இருக்கிறோம் என்றார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் தாரா நாயுடு கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனம் புதிய வியாபார யுக்திகளை பின்பற்றி வருகிறது.
ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகளை தொடரும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளூர் சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றார் அவர்.
இந்நிலையில் அந்த நிறுவனம் சில வளர்ச்சி பணிகளையும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 19 விமானங்களுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆண்டின் இறுதியில் அதை 25 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதில் 7 விமானங்களை வாடகைக்கு வாங்கி பயன்படுத்த இருக்கிறது.