கிராமங்களுக்குப் போய் சேவை செய்தால் டாக்டர்களுக்கு ஊக்கத் தொகை - ஆசாத்
சுகாதாரத் துறையின் 100 நாள் செயல் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், மலைப் பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள், பழங்குடியினப் பகுதிகள் என மருத்துவ சேவை அதிக அளவில் இல்லாத பகுதிகளுக்கு டாக்டர்களை சேவை செய்ய அனுப்பும் திட்டத்தை சுகாதாரத் துறை தீட்டியுள்ளது.
இப்படிப்பட்ட பகுதிகளில் சேவை செய்ய முன்வரும் டாக்டர்களுக்கு அதிக அளவிலான ஊக்கத் தொகைகளைத் தரவும் திட்டமிட்டு வருகிறோம். இதுதொடர்பாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளுடனும் கலந்து பேசி எந்தெந்தப் பகுதிகளுக்கு டாக்டர்களின் சேவை தேவை என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இப்படி கிராமப்புறங்கள், மருத்துவ வசதியே இல்லாத பகுதிகளில் சேவை செய்ய முன்வரும் டாக்டர்களுக்குத் தேவையான ஊக்கத் தொகையை மாநில அரசுகள் வழங்கும். அதற்கு மத்திய அரசு உதவும்.
இதுதொடர்பான சேவைக்கு முன்வரும் டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு இடத்திற்கு ஏற்றார்போல ஊக்கத் தொகை அளிக்கப்படும். முன்பும் கூட இதே திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அதை விட அதிக அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவுள்ளோம். தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் நிதி இதற்கு பயன்படுத்தப்படும். தேவைப்படும் அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்படும்.
தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் நலிவடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும். தேவைப்படும் இடங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும். சுகாதாரமான குடிநீர் வசதி, ஜெனரேட்டர், தேவைப்படும் அத்தியாவசியக் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
ஒரு கிளினிக்கில் என்னென்ன இருக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் விரும்புவாரோ அதெல்லாம் இங்கு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். அப்படிச் செய்வதன் மூலம் இங்கு பணிபுரிய டாக்டர்களும் முன் வருவார்கள்.
அரசு சார் வாக்சின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கவும் அவற்றைப் புதுப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இவை மூடப்பட்டன. மீண்டும் இவற்றைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றை எளிமையாக்கும் வகையிலும் அதுதொடர்பான சட்டம் திருத்தப்படும் என்றார் ஆசாத்.