மேற்குக் கடல் பிராந்தியம் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலாம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை
ஹைதராபாத்: நாட்டின் மேற்குக் கடல் பிராந்தியம் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவும் வாய்ப்பு இருப்பதாக உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களை எச்சரித்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இன்று என்.எஸ்.ஜி படைப் பிரிவை தொடங்கி வைத்தார் ப.சிதம்பரம்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்குப் பிராந்திய கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவலாம் என உளவுப் பிரிவு தகவல்கள் கூறியுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிராந்தியத்திற்குட்பட்ட கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளோம். அதற்காக நாளையே தாக்குதல் நடத்தப் போகிறது என்ற அச்சம் தேவையில்லை.
பெங்களூர், ஜோத்பூர் நகரங்களில் சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகளை நிறுவ ராணுவம் ஒத்துழைக்கும்.
பல்வேறு பகுதிகளில் என்எஸ்ஜி மையங்களை திறப்பதன் மூலம் நாட்டுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு மிரட்டல் இருப்பதாக அர்த்தம் இல்லை. இதுபோல அமைப்பதால் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு விரைவாக கமாண்டோக்களை அனுப்ப முடியும் என்றார் சிதம்பரம்.