அரசு பஸ்களில் விரைவில் மூட்டைப் பூச்சிக்கு முடிவு: நேரு
சென்னை: தமிழக அரசின் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் விரைவில் மருந்து அடித்து ஒழிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், இதனால் பயணிகள் நிம்மதியாக செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டினர்.
இதற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேரு கூறுகையில்,
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1,020 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 400 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பல பேருந்துகளில் மூட்டைப் பூச்சி அதிகம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் மருத்து அடிக்கப்பட்டு மூட்டைப் பூச்சிகள் ஒழிக்கப்படும்.
கும்மிடிப்பூண்டியில் பெத்திகுப்பத்துக்கு அருகே ரூ. 72 கோடி செலவில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி அமைக்கப்படும்.
பொன்னோரி-கும்மிடிப்பூண்டிக்கு இடையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அங்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றார்.